Sunday, October 16, 2011

இலங்கையில் தகவல் தொடர்பாடல் அபிவிருத்தித் திட்டங்கள்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதற்கான பல வகையான திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.


e-Srilanka Programe (e-இலங்கை வேலைத்திட்டம்)

தகவல் தொழில்நுட்பத்தை கிராமிய மாணவர்களிடம் மாத்திரம் அன்றி நகர மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதில் e-sri lanka திட்டம் முக்கிய பங்கை ஆற்றுகின்றது. இலங்கையில் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல், வறுமையை ஒழித்தல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு e-Sri lanka Programme செயற்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம்

 நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்
 வறுமையைக் குறைத்தல் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல்
 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு கொண்ட மூளைசாலிகளை உருவாக்குதல்
 அரச சேவைகளையும் ஏனைய சேவைகளையும் நவீன மயப்படுத்தல்.
 சமூக மேம்படுத்தல்
 வாய்ப்புக்களையும், அறிவையும், நியாயபூர்வமாக வழங்கப்படுவதை நிச்சயப்படுத்தல்.போன்ற செயற்திட்டங்களைச் செயற்படுத்த முயன்று கொண்டு இருப்பதைக் காண முடிகின்றது.

e – சமூகம் (e- Society) e-சமூகத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், இலங்கையின் வறிய மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

e-சமூக நிகழ்ச்சித் திட்டத்தில் அடங்கும் மூன்று பிரதான துறைகள்: e-சமூக அபிவிருத்தியின் முன்னெடுப்பு, e-கிராமம், ict ஊடான கூட்டு சமூக பொறுப்புக்கள் என்பனவாகும்.

e– கிராமம் (e-Village)

கிராமிய சமுதாய மக்களின் வாழ்க்கையின் குறிப்பாக இளைஞர் வாழ்க்கையின் வளர்ச்சி, தரச் சிறப்பு ஆகியவற்றிற்கு ict இனை கருவியாகப் பயன்படுத்துவதன் மூலமும் அதிக வாய்ப்புக்களை வழங்குதல் e-கிராமத்தின் நோக்கமாகும். e-கிராமத்தின் கீழ் மாதிரித் திட்டம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள சிறிய கிராமமான மகாவிலாச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களும் இளைஞர்களுக்கு ஒரு சில வாய்ப்புக்களும் உள்ள இந்தக் கிராமம் ict அறிமுகஞ் செய்யப்பட்டபோது பெரிய அளவில் நன்மையடைந்தது. அர்ப்பணிப்பு மனப்பான்மையுள்ள ஆசிரியர்கள், தனிநபர்கள் தோற்றம் பெறுவதில் இத்திட்டம் தெளிவான தாக்கத்தைச் செலுத்தியது. இந்த வெற்றிகரமான மாதிரியை ICTA நாடு பூராகவும் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் விஸ்த்தரிப்பதற்கு விரும்புகிறது. சிறுவர்கள், முதியோர்களுக்கு தகவல், அறிவு என்பவற்றுக்கான வழிகாட்டுதல், ஆற்றல் மிக்க சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புதல் என்பன இத்திட்டத்தின் சில இலக்குகளாகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினால் கிராமிய மக்களை வலுப்படுத்தும் வழிவகைகளை இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இப்போது பரந்தளவில் ஆராய்ந்து வருகின்றது.


e – ஆசியா (e-ASIA)

இவ்வாண்டு டிசம்பர் மாதம் e-ASIA சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கின்றது. இது e-ASIA மாநாட்டுத் தொடரின் நான்காவது கட்டமாகும். இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்(ICTA) இதனை ஏற்பாடு செய்து வருகின்றது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அபிவிருத்திக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை இலக்காகக் கொண்டே இம் மாநாடு இடம்பெறுகின்றது. ஈ-அரசாங்கம் (e-Government), டிஜிட்டல் கற்கை, ஈ-சுகாதாரம் மற்றும் தொலைநிலையங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டு இம் மாநாட்டின் அமர்வுகள் ஒழுங்கபடுத்தப்பட்டுள்ளன. அறிவார்ந்த சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த அடிப்படையில் அறிவார்ந்த சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினால் மாத்திரமே சாத்தியப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டே அண்மையில் 2009ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கில மொழி ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. காத்திரமான மனிதவளம் ஒன்றை உருவாக்கி உறுதியான பொருளாதாரச் சந்தை ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு இது பெரிதளவில் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment